உள்ள(த்)தைச் சொல்கிறோம்

திருக்கோயில் தீர்த்தங்கள் பற்றி திருமாளன் தீர்த்தம், சிவனின் தீர்த்தம், சரவணனின் தீர்த்தம் என்று அனைத்தையும் விபரமாக முத்துக்கள் முப்பது கட்டுரையாளர் எஸ்.கோகுலாச்சாரி அவர்களின் மூலமாக அறிந்தோம். திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் திருக்கோயின் வண்ண புகைப்படங்கள் மற்றும் தெய்வீக சிலைகள் உயிர்ப்புடன் இருப்பதை மதுஜெகதீஷ் கை வண்ணத்தில் தரிசித்தோம். மேலும், தெள்ளத் தெளிவாக ஆற்றங்கரையில் ஒரு காவல் தெய்வம் என்ற தலைப்பில், பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோயிலின் தல வரலாற்று பெருமையை அறிந்து வியப்புற்றேன்.
– லட்சுமி சங்கர், கரிகிரி காட்பாடி.

வராஹியின் அம்சமே திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, மாம்பழச்சாலையில் மங்கள அனுமன் என எங்கள் ஊரின் தெய்வத்தை பற்றி படித்து ரசித்தேன். அதே போல், ஏழாவது வாசல் என்னும் கட்டுரை, (ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதை) “மன்னா, வேந்தே, அரசே’’ என ஒவ்வொருவரையும் அழைத்த திருவிளையாடல் படம் தருமி நாகேஷை நினைவூட்டியது.
– ஸ்ரீ காந்த், பிச்சாண்டார் கோயில், திருச்சி.

`ஆத்ம தீர்த்தம்’ என்ற தலையங்கம், ஆத்ம திருப்தியாக மலர்ந்து மணத்தது! வேத அலைகள், தீர்த்தங்களிலும் வேத அதிர்தலாக மாறி நீரின் தன்மையை மாற்றி சிறப்பு சக்தியாகப் பாய்வதை தெளிவாக விளக்கியுள்ளார், பொறுப்பாசிரியர்!
– ஆர்.உமா காயத்ரி, நெல்லை.

திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் என்கிற அழகியநாதர் ஆலயத்தின் சிற்பங்களின் சிறப்புக்களை படித்து பார்த்து, பிரமித்துப் போனோம். இத்தலத்து அன்னை முத்தாம்பிகை பொய் சத்தியம் செய்தவனைக் கொன்று தர்மத்தை நிலை நாட்டியவள் என்கிற தகவல் சிலிர்க்க வைத்துவிட்டது. அதே போல், அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை உள்ளம் கொண்ட மகான் வள்ளலார் சுவாமிகளின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களை, அவரின் மகத்துவங்களை விவரித்த கட்டுரையை படித்து ‘`ஆஹா…. எப்பேர்ப்பட்ட ஞானி’’ என்று எண்ணி மகிழ்ந்தேன்.
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.

புதுமனைக்கு குடிபுகும் அன்பர்களின் கவனத்திற்கு கூறியது நல்லயோசனை. அதே போல், “யோக ப்ரஷ்டன் என்பவன் யார்?’’, “நடராஜப்பத்தின் ஆபூர்வத்துல விளக்கம்’’, “கூர்ம அவதாரம்’’, “காவல் தெய்வம்’’ என இதழே அற்புதமாக இருந்தது.
– A.N.சிதம்பரம், விராச்சிலை – புதுக்கோட்டை.

“அச்சம் தவிர்ப்பாள் அனிதாகரி யோகினி’’ என்னும் கட்டுரையை கண்டேன். திரிசூலமும் ரத்த பாத்திரமும் யோகினியின் வாகனம் போன்ற பல அரிய விஷயங்களை, எங்களுக்கு தந்தது வரப்பிரசாதம். மேலும், நம்முடைய நாட்டில் எத்தனை எத்தனை புனித தீர்த்தங்கள் இருக்கின்றன என்பதை கூறியது அற்புதம்! கருடதீர்த்தம், சக்ரதீர்த்தம், பாற்கடல் தீர்த்தம் சங்கதீர்த்தம்… அடேயப்பா… என்று மலைக்க வைத்தன. நன்றிகள்!
– வண்ணை கணேசன், சென்னை.

“ஆற்றாங்கரையில் ஒரு காவல் தெய்வம்!’’ என்ற தொகுப்பும் படங்களுமே வாசகர்களுக்கு வரப்பிரசாதமாகி விட்டன! பொள்ளாச்சி அருகே வரலாற்றுப் பின்னணியில் மகிமையுடன் திகழும் மாசாணித் தெய்வத்தை உப்பாற்றங்கரையில் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்ற பிரேமையோடு திருப்தியுற்றேன்.
– என்.ஜானகிராமன், நெல்லை.

“ஆஷாட நவராத்திரியில் வாராஹியை துதிப்போம்!’’ என்ற தொகுப்பின் மூலம் ஆனி – ஆடி மாதங்களின் சந்திப்பில் சுக்லபட்ச வளர்பிறைத் தன்மையின் நன்மையை அறியச் செய்ததோடு, வாராஹித் தாயின் அரிதான குப்த நவராத்திரியின் சிறப்பை அவளது பன்முக நாமப் பின்னணியோடு அறிந்து அகம் மகிழ வைத்தமைக்கு நன்றி.
– எஸ்.எல்.ஜார்ஜ் அருண், தூத்துக்குடி.

Related Stories: