வடமதுரை, ஜூலை 15: வடமதுரை அருகேயுள்ள எலப்பார்பட்டியை சேர்ந்தவர் சந்தியா (19). இவரது மாமனார் பரமசிவம் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி தரப்பினருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் பரமசிவத்தின் தோட்டத்தில் இருந்த தண்ணீர் மோட்டாரை கருப்பசாமி இயக்கியதாக கூறப்படுகிறது. இதனை சந்தியா மற்றும் அவரது குடும்பத்தினர் தட்டி கேட்டுள்ளனர். அப்போது இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதில் சந்தியா மற்றும் எதிர் தரப்பை சேர்ந்த காவேரி (19) ஆகியோர் காயமடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் மற்றும் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக வடமதுரை போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் கருப்புசாமி, மாயாண்டி, பொன்னம்மாள், காவேரி, பரமசிவம் பெரியமாயன், சந்தியா உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
