புழல், ஜூலை 15: காரனோடை பஜாரில் கடை ஒன்றில் பொருட்களை சோதனை செய்ய முயன்றபோது, போலி உணவு பாதுகாப்பு அலுவலரை போலீசார் கைது செய்தனர். சோழவரம் அடுத்த காரனோடை பஜாரில் உள்ள கடை ஒன்றில் ஒருவர் சென்று தான் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் இருந்து வருகிறேன். உங்களுடைய கடையில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் சோதனை செய்ய வேண்டும். அதை எடுத்துக்காட்டுங்கள் என தெரிவித்தார். இதில், கடை உரிமையாளர் சந்தேகம் அடைந்து சோழவரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சோழவரம் போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று அந்த வாலிபரிடம் விசாரணை செய்ததில் உணவு பாதுகாப்பு அலுவலர் என போலியான அடையாள கார்டு வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அவரை சோழவரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை செய்ததில் சென்னை கீழ்ப்பாக்கம் கேசவன்குளத்தை சேர்ந்த பழனிவேல் 50 என தெரிய வந்தது. மேலும், இவர் வைத்திருந்த சூட்கேஸ் சோதனை செய்ததில் பல போலி அரசு அடையாள அட்டைகள் வைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர், பொன்னோரி கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.
