×

கும்மிடிப்பூண்டி சிப்காட் காப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் பர்னஸ் வெடித்து சிதறி ஊழியர் பலி: 7 பேர் படுகாயம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள காப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் திடீரென பர்னஸ் வெடித்து சிதறியதில் வடமாநில ஊழியர் பலியானார். 7 ஊழியர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ேபாலீசார் விசாரித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு, 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள காப்பர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மற்றும் இரும்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவது வழக்கம். இதுபோன்ற விபத்துகளில் இதுவரை 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இறந்துள்ளனர்.

சிப்காட்டை ஒட்டியுள்ள பார்த்தபாளையம் பகுதியில் தனியார் காப்பர் தொழிற்சாலை 5 வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 3 ஷிப்ட் முறையில் ஊழியர்கள் வேலை செய்துவருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை 5:30 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் பர்னஸ் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி ஒரு ஊழியர் பலியானார். 7க்கும் மேற்பட்ட வடமாநில ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர். உடனடியாக சக ஊழியர்கள் படுகாயத்துடன் இருந்த ஊழியர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் மற்றும் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் சசிதரன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், தீயில் கருகி உயிரிழந்தது பீகாரை சேர்ந்த ரவி ரஞ்சன் என்பதும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சிம்பர்சிங் (24), பீகார் மாநிலத்தை சேர்ந்த பூசன்குமார் (25), ஓம்குமார் (22), ரஞ்சித்குமார் (35), ராஜா பாபு (26), ரன்வீர் குமார் (26), பிரின்ஸ் குமார் (27), விமர்சிங் என்பதும் தெரியவந்தது. இதில், விமர்சிங் மேல் சிகிச்சைக்காக சென்னை கேஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்து பகுதி மக்கள் கூறுகையில், ”கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்கனவே குழந்தை தொழிலாளிகள் பணியாற்றினர். பழைய பேட்டரி, வயர்கள், காப்பர்களை உருக்கும்போது வெளியேறும் கருப்பு துகள்கள் பழம்பாளையம், சித்தராஜ் கண்டிகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவி அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது வழக்கம். இதுசம்பந்தமாக தொழிலாளர் துறை அதிகாரிகள், சிப்காட் நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது. இந்த பிரச்னையில் கலெக்டர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.

பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் மற்றும் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த மாதம் 2ம்தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு வடமாநிலத்தை சேர்ந்த 83 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 18 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். தற்போது 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த சம்பவம்போல் இன்று அதிகாலை கும்மிடிப் பூண்டி சிப்காட்டில் உள்ள தனியார் காப்பர் தொழிற்சாலையில் பயங்கர சத்தத்துடன் பர்னஸ் வெடித்து சிதறியதில் ஊழியர் ஒருவர் பலியானார். 7க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவம் நடப்பதற்கு அரசு அதிகாரிகளும், அரசின் மெத்தனபோக்கும்தான் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தொழிற்சாலையில் காப்பரை உருக்கும்போது அதில் இருந்து வெளியேறும் கருப்பு துகள்களால் மூச்சுத்திணறல் ஏற்படுவதுடன் பல பாதிப்பு ஏற்படுவதாகவும் பகுதிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

Tags : Kummidipundi Chipcat ,Kummidipundi ,Northern State ,Kummidipundi Chipkot ,Ebolizar ,
× RELATED கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்களில்...