ஓமலூர், ஜூலை 14: சேலம் மாவட்டத்தில் மாம்பழம் சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், தற்போது கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு பெய்த நல்ல மழையால், மாம்பழ விளைச்சல் அதிகரித்திருந்த நிலையில், சந்தைக்கு தினசரி 50 டன் வரை வந்த மாம்பழங்கள், தற்போது வெறும் 10 டன் அளவிற்கே விற்பனைக்கு வருகின்றன. குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் விரும்பும் பங்கனப்பள்ளி, நடுசாலை, மல்கோவா மற்றும் செந்தூரா ஆகிய ரகங்களின் வரத்து, கடந்த 2 வாரங்களாக கடுமையாக சரிந்துள்ளது. வரத்து குறைந்துள்ள நிலையிலும் ஓமலூரில் உள்ள சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள தற்காலிக கடைகளில் மாம்பழ விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாம்பழங்கள் தரத்தை பொறுத்து கிலோ ரூ.50 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
