×

கூலிப்படை ஏவி கொல்ல முயற்சி சி.வி.சண்முகம் எம்எல்ஏ, சகோதரர் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்: விழுப்புரம் எஸ்பியிடம் பசுபதி பரபரப்பு புகார்

விழுப்புரம், ஜூலை 14: விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி நிர்வாகிகளுடன் சென்று எஸ்பி மதிவாணனிடம் புகார் மனு அளித்தார். தொடர்ந்து வெளியே வந்த அவர் கூறுகையில், கடந்த 11ம்தேதி வல்லம் ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் சி.வி சண்முகம் அவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரின் தூண்டுதலின்பேரில் திண்டிவனத்தை சேர்ந்த ரூபன்ராஜ், வெங்கடேசன், பாலாஜி உள்ளிட்டவர்கள் அடியாட்களை அழைத்துவந்து கூட்டம் நடைபெறும் இடத்தில் நின்றுகொண்டு அங்குவந்த அதிமுகவினரை வரவிடாமல் மிரட்டல் விடுத்தனர். என் மீதும் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். போலீசார் முன்கூட்டியே அறிந்து தடுத்துவிட்டனர். என்னை கொலைசெய்யும் நோக்கத்தோடு பெரிய கருங்கற்களை கொண்டு தலையைநோக்கி வேகமாக வீசினர். இக்கூட்டம் நடப்பதற்கு முன்பாகவே சி.வி சண்முகம் அவரது சகோதரர் நாங்கள் நடத்தும் கூட்டத்தை நடத்தவிடக்கூடாது.

மாவட்ட செயலாளர் பசுபதியை ஒழித்துகட்டிவிடுங்கள் என்றும், அப்படி செய்பவர்களுக்கு பரிசு வழங்குவதாகவும் அவர்கள் தான் தன்னுடைய விசுவாசி என்றும் கூறியிருக்கிறார். இந்தபுகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் இபிஎஸ் அறிவுறுத்தலின்பேரில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம். சி.வி சண்முகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தவெகவில் இணைய ஏற்பாடுகளை செய்துவிட்டார். நிர்வாகிகள் யாரும் வராததால் பணம்கொடுத்து கூட்டத்தை கூட்டி, பேருந்துக்கும் அட்வான்ஸ் கொடுத்துவிட்டார். ஆனால் அங்கு கட்சியில் சேர்க்க மறுத்து விட்டார்கள். பாஜகவில் சேரும் முயற்சியும் எடுபடாமல் தனிஆளாக அரசியலில் ஓரங்கட்டப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட துணைசெயலாளர் ஷெரீப், நகர செயலாளர்கள் ராமதாஸ், செங்குட்டுவன், கலைஇலக்கியபிரிவு திருப்பதிபாலாஜி மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags : CV ,Shanmugam ,Pasupathi ,Villupuram ,Villupuram District ,AIADMK ,SP ,Mathivanan ,Vallam Union ,
× RELATED கடற்கரை சாலையில் அதிவேகத்தில் சென்ற கார் இணையத்தில் வீடியோ வைரல்