ஊத்துக்கோட்டை, ஜூலை 14: பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் இறால் மற்றும் கடல் உணவுகள் பதப்படுத்தும் தொழிற்சாலையின் ஒரு கேட்டிற்கு மட்டும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும், சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைத்தவுடன் மற்ற 3 கேட்டுகளுக்கும் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் மற்றும் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது. இதில், கடந்த மாதம் 21ம் தேதி தொழிற்சாலையில் பணியாற்றிய வடமாநிலத்தவர்கள் அமோனியா வாயு கசிவில் பாதிக்கப்பட்டு 83 பேர் சிகிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில், மேல் சிகிச்சைக்காக 20 பேர் சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 58 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதில், 18 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கன்னிகைப்பேர் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு சேமிப்பு கலன்களில் இருந்து எடுக்கப்பட்டு 5 டன் எடையுள்ள அம்மோனியா வாயு டேங்கர் லாரியில் எடுத்து செல்லப்பட்டு சென்னை மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் இறக்கப்பட்டது. தொழிற்சாலையில் உள்ள குழாய்களில் எஞ்சிய அம்மோனியாவை கந்தக அமிலம் கொண்டு கம்ப்ரஸர் மூலம் அகற்றி சுமார் 400 கிலோ எடை கொண்ட அமோனியா அகற்றப்பட்டது.
இந்நிலையில், கடந்த 8ம் தேதி தொழிற்சாலையில் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆய்வுப் பணிகளை முடித்து தொழிற்சாலையில் உள்ள அலுவலகம் மற்றும் குடோன்கள், அமோனியா இருந்த இடங்கள் என 5 அறைகளில் திருவள்ளூர் ஆர்டிஒ ரவிச்சந்திரன் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும், கடந்த 11ம் தேதி இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு சீல் வைப்பதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மனித உயிர்களுக்கு அச்சுறுத்தும் விதமாக இருந்த தமிழகத்தில் தடை செய்யப்பட்ட மரங்கள் அகற்றப்பட்டன.
இந்நிலையில், நேற்று இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு சென்ற அதிகாரிகள், 4 கேட்டுகள் உள்ளன. இதில், ஒரு கேட்டிற்கு மட்டுமே திருவள்ளூர் ஆர்டிஒ ரவிச்சந்திரன் ‘சீல்’ வைத்தார். மீதமுள்ள 3 கேட்டிற்கு சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் அனுமதியளித்தவுடன் தான் சீல் வைக்க முடியும், மீதமுள்ள கேட்டிற்கு விரைவில் சீல் வைக்கப்படும் என தெரிவித்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
