தீராத கால் வலியால் முதியவர் தீக்குளித்து தற்கொலை

தொட்டியம், ஜூலை 13: திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் முருங்கை அடுத்த கேசாரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (76). இவரது மகன் முருகேசன் (46). எலக்ட்ரீஷியன். ஆறுமுகத்திற்கு கடந்த 4 ஆண்டுகளாக நீரிழிவு நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதனால் அவரது இரண்டு கால்களிலும் அடிக்கடி வீக்கம் ஏற்பட்டு கடுமையான வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல மருத்துவமனைகளில் காட்டியும் வலி குணமாகாததால் ஆறுமுகம் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி மாலை தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிவிஎஸ் 50 இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை பிளாஸ்டிக் பாட்டிலில் பிடித்துள்ளார். பின்னர், வீட்டின் தாழ்வாரப் பகுதிக்குச் சென்று, திடீரென தன் தலையில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது பேரன் லோகேஸ்வரன் ஆகியோர் தீயை அணைத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஆறுமுகம், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் முருகேசன் கொடுத்த புகாரின் பேரில், காட்டுப்புத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: