கரூர், ஜூலை 13: பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசு பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்களை முன்னேற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தினை (UYEGP) செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ. 15.00 லட்சம் வரை தேசியமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் 25% மானியத்துடன் (அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் நிதியுதவி வழங்கப்படும்.இத்திட்டத்தின் கீழ் கடன்பெற விண்ணப்பிக்கும் பொதுபிரிவினருக்கு 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சிறப்பு பிரிவினருக்கு (பட்டியல் இனத்தவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மகளிர், மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர்களுக்கு வயது 55 க்குள் இருக்க வேண்டும் மற்றும் கல்வித்தகுதி குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி. இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர்கள் கடன் வசதி பெறுவதற்கு கல்வி தகுதி தேவை இல்லை.
இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்து பயன்பெற விரும்பும் பயனாளிகள் (www.msmeonline.tn.gov.in /uyegp) என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் குறித்த மேலான விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற பொது மேலாளர், மாவட்ட தொழில்மையம், சத்தியமூர்த்தி நகர், தாந்தோணிமலை, கரூர் அலுவலகத்தினை அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது கைப்பேசியிலோ (கைப்பேசி எண்: 04324 255179) தொடர்பு கொண்டு பயன் பெறலாமென கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
