- நாகௌர் ஆண்டவர் தர்கா சந்தை
- நாகப்பட்டினம்
- தர்கா நிர்வாகம்
- சட்டப்பேரவை
- நாகூர் ஆண்டவர் தர்கா
- சந்தை
- சமூகத்தில்
- மண்டபம்
நாகப்பட்டினம், ஜூன் 30: நாகூர் ஆண்டவர் தர்கா மார்க்கெட், சமுதாயக்கூடம் ஆகியவற்றை அரசு நிதியில் கட்டித்தர வேண்டும் என தர்கா நிர்வாகம் சார்பில் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளித்தனர். புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா தலைமை அறங்காவலர் நஜிமுதீன்சாகிப், பரம்பரை அறங்காவலர் செய்யது முகமது கலிபா சாகிப் காதிரி ஆகியோர் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவை எம்எல்ஏ அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா மார்க்கெட் நூற்றாண்டு கால பழமை வாய்ந்தது. இது சேதம் அடைந்து பொதுமக்கள் வருகை தர முடியாத நிலையில் உள்ளது.
எனவே நூற்றாண்டு கால பழமை வாய்ந்த நாகூர் ஆண்டவர் தர்கா மார்க்கெட்டை அரசு நிதியில் புதுப்பித்து கட்டித் தர வேண்டும். இதனால் ஏராளமான மக்கள் பயன் அடைவார்கள். மேலும் நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு சொந்தமான தர்கா தோட்ட இடத்தில் அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் பெரிய சமுதாயக்கூடம் தமிழக அரசு சார்பில் கட்டித் தர வேண்டும். இதனால் நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு வரும் பக்தர்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள். இது பல அடுக்குமாடி கட்டிட அமைப்பு கொண்ட யாத்ரா நிவாஸ் கட்டிடமாக இருக்க வேண்டும்.நாகூர் தர்கா சாஹிப்மார்கள், நாகூரில் உள்ள உலமா பெருமக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு உலமாக்கள் நல வாரிய பயனாளிகள் அட்டைப் பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு முகாம் நாகூர் ஆண்டவர் தர்கா அலுவலகத்தில் நடத்த வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ ஜவாஹிருல்லா அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.அப்போது நாகூர் தர்கா மக்கள் தொடர்பு அலுவலர் ராஜமாணிக்கம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில செயலாளர் முபாரக், மனிதநேய மக்கள் கட்சி தலைமை பிரதிநிதி ஜபருல்லா, நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் இப்ராகிம் ஆகியோர் உடனிருந்தனர்.
