தஞ்சாவூர், ஜூன் 30: சென்னை விளையாட்டு மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியான விவகாரத்தில் தமிழக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருந்தாலும் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர். அதன்படி, தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு நேற்று திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாணவரணி மாநகர அமைப்பாளர் ராம்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ டிகேஜி நீலமேகம், திமுக மாநகர செயலாளர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், கும்பகோணம் மாநகர அமைப்பாளர் கௌதமன், துணை அமைப்பாளர்கள் தீனா, தேவராஜ் மற்றும் கவுன்சிலர்கள், மாணவரணி, மகளிர் அணி உள்ளிட்ட அனைத்து அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
