×

ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேருக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் சபாநாயகரால் தொடர்ந்து விசாரிக்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் சட்டமன்ற செயலாளர் பதில் மனு

 

சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்தாலும், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் சபாநாயகரால் தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று தமிழக சட்டமன்ற செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். த.வெ.க. அரசு, கடந்த மே 13ம் தேதி பெரும்பான்மை வாக்கெடுப்பு கோரிய போது கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் வாக்களித்தது தொடர்பாக தகுதி நீக்க விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோரின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இதே கோரிக்கையுடன் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அதன் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் தொடர்பாக சட்டமன்ற செயலாளர் சாந்தி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த பதில் மனுவில், எம்.எல்.ஏ.களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதால் தகுதி நீக்க நடவடிக்கை செல்லாததாகி விடும் என்று கூறுவது தவறானது. ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதால் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க நடவடிக்கைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுவார்கள் என்று கூற முடியாது. ராஜினாமா செய்தாலும் தகுதி நீக்க மனுக்கள் சபாநாயகரால் தொடர்ந்து விசாரிக்கப்படும்.

தகுதி நீக்க விசாரணையில் இறுதி முடிவு எட்டிய பிறகே நீதிமன்றங்கள் தலையிட முடியும். காலியிடங்களுக்கு தேர்தல் நடத்த கூடாது என கோரிக்கை விடுப்பது விசாரணைக்கு ஏற்புடையது அல்ல. நான்கு எம்.எல்.ஏ.க்களும் தாமாக முன்வந்து தங்கள் கைப்பட எழுதி ராஜினாமா கடிதங்களை அளித்துள்ளதால், அதன் உண்மை தன்மை குறித்து சந்தேகம் எழுப்ப எந்த ஆதாரங்களும் இல்லை.

ராஜினாமா கடிதங்களை ஏற்றதன் மூலம் சபாநாயகர் தனது அரசியல் சாசன கடமையை நிறைவேற்றி இருக்கிறார். ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதில் எந்த அவசரமும், உள்நோக்கமும் இல்லை. ராஜினாமாவை ஏற்பதற்கு முன்பு தகுதி நீக்க மனு மீது முடிவெடுக்க வேண்டும் என எந்த விதிகளிலும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி நீக்க மனு மீது குறித்த காலத்திற்குள் சபாநாயகர் முடிவெடுப்பார். அதற்கு நீதிமன்றத்தின் உத்தரவு அவசியம் இல்லை என்பதால், இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், இசக்கி சுப்பையா தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மற்ற எம்.எல்.ஏ.க்கள் பதில்மனு தாக்கல் செய்யாததால், வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு ஜூலை 13ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

Tags : AIADMK ,Assembly ,Chennai ,Tamil Nadu Assembly Secretary ,Chennai High Court ,T.R.K. Government ,
× RELATED தனிநபர்கள் தலையீடு இருக்காது...