லக்னோ: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு எந்த வழக்கறிஞரும் வாதாடக் கூடாது என பைசாபாத் பார் அசோசியேஷன் (Faizabad Bar Association) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மீறி வாதாடும் வழக்கறிஞர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
ராமர் கோயிலுக்குப் பக்தர்கள் வழங்கிய காணிக்கைப் பணத்தில் சுமார் ரூ.7 முதல் 7.5 கோடி ரூபாய் வரை கையாடல் செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாகக் கோயில் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த அவினாஷ் சுக்லா, அனுகல்ப் மிஸ்ரா உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று நடைபெற்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாட கூடாது என முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்துச் சங்கத்தின் செயலாளர் சைலேந்திர ஜெய்ஸ்வால் கூறுகையில், “கோயில் காணிக்கை திருடப்பட்ட சம்பவம் எங்கள் அனைவரின் மனதையும் புண்படுத்தியுள்ளது. எனவே, கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக பைசாபாத் வழக்கறிஞர்கள் யாரும் வாதாட மாட்டார்கள் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் சம்பத் ராய், அனில் மிஸ்ரா மற்றும் கோபால் ராவ் ஆகியோர் மீது வழக்கறிஞர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அவர்கள் மூவரும் இன்னும் 3 நாட்களுக்குள் அயோத்தியை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இல்லையெனில் அயோத்தி நகரம் முழுவதும் முற்றுகையிடப்பட்டு முடக்கப்படும் என்றும் வழக்கறிஞர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த 2005-ஆம் ஆண்டு ராமர் கோயில் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் போதும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடப் போவதில்லை என்று அயோத்தி வழக்கறிஞர்கள் சங்கம் இதே போன்ற முடிவை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
