×

பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மானியவிலை டீசல் பங்கை உடனடியாக திறக்க வேண்டும்

 

கொள்ளிடம், ஜூன் 29: கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள டீசல் பங்க் திறக்கப்படுமா என்று மீனவர்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இயற்கை துறைமுகம் என்று அழைக்கப்படும் இந்த துறைமுகத்தின் மூலம் தினந்தோறும் 350 விசைப்படகுகள் மற்றும் 500 பைபர் படகுகள் மூலம் சுமார் 7000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். மேலும் துறைமுக வளாகத்தில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி தடைக்காலம் 60 நாட்களுக்கு பிறகு கடந்த 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் மீனவர்களுக்கு மானிய விலையில் பழையாறில் மீன் வளர்ச்சி கழகத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள டீசல் பங்க் மூலம் மானிய விலையில் டீசல் வழங்காமல் இருந்து வருவதால், மீனவர்கள் தங்கள் படகுகளுக்கு பழையாறு துறைமுகத்தில் உள்ள டீசல் பங்கின் மூலம் டீசல் வாங்க மறுத்துள்ளனர். மானிய விலையில் ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 83 க்கு விற்பனை செய்வதற்கு பதிலாக வெளியில் உள்ள பெட்ரோல் பங்கின் மூலம் விற்பனை செய்யப்படும் விலையை விட அதிகமாக இங்கு விற்பனை செய்யப்படுவதால் மீனவர்கள் துறைமுகத்தில் உள்ள பங்கிற்கு சென்று டீசல் வாங்காமல் புறக்கணித்துள்ளனர். வெளியில் சென்று டீசல் வாங்கி விசைப்படகுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். மாநில விலையில் டீசல் விற்பனை செய்யாமல் இருந்து வருவதால் மீனவர்களும் டீசல் பங்க் நோக்கி செல்லவில்லை,

இதனால் கடந்த மூன்று மாத காலமாக தொடர்ந்து டீசல் பங்க் பூட்டியே கிடக்கிறது.இதுகுறித்து பழையாறு மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த கருவாடு மற்றும் மீன் வியாபாரிகள் சங்க தலைவர் பொன்னையா கூறுகையில், மீன் வளர்ச்சி கழகத்தின் மூலம் பழையாறு துறைமுகத்தில் அமைந்துள்ள டீசல் பங்க் மூலம் மானிய விலையில் டீசல் வழங்காமல் இருந்து வருவதால் இந்த பங்க் பூட்டியே கிடக்கிறது. இதன்மூலம் மீனவர்களுக்கு மாநிலம் டீசல் வழங்கினால் இந்த பங்கின் மூலமே டீசல் வாங்கி பயன்படுத்த முடியும். எனவே இந்த டீசல் பங்கை திறந்து மானிய விலையில் மீனவர்களுக்கு டீசல் வழங்க மீன் வளர்ச்சி கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pazhayaru fishing port ,Kollidam ,Mayiladuthurai district ,
× RELATED வீடு கட்டுவதற்கு ரூ.50,000 மாமூல் கேட்டு தவெக நிர்வாகி மிரட்டல்