மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதி விவரத்தை குறிப்பிடும் முடிவை கைவிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கக்கூடிய அடையாள அட்டையில் மாணவர்களின் சாதி குறித்த விவரங்களையும் இடம்பெறச் செய்யப்போவதாக தமிழ்நாடு அரசின் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மாணவர்களின் சாதி விவரங்கள் அடையாள அட்டையில் வெளிப்படுத்துவது அவசியற்றது.

இது மாணவர்களிடையே சாதிப் பாகுபாட்டை அதிகரிக்கும். கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாட்டை களைவது தொடர்பாக நியமிக்கப்பட்ட நீதிபதி சந்துரு தலைமையிலான குழு மாணவர் மத்தியில் சாதியை வெளிப்படுத்தும் அடையாளங்களை களைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட ஏராளமான பரிந்துரைகளை வழங்கி உள்ளது.

அவற்றை நடைமுறைப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில், தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதி பெயரை இடம்பெறச் செய்வது என்பது ஏற்புடையதல்ல. இத்தகைய முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: