சென்னை: தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. உலக நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற சர்வதேச காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. தென்னிந்தியாவிலேயே அதிக அளவில் தங்கம் வைத்திருக்கும் மாநிலமாக தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, சர்வதேச பொருளாதாரச் சூழலால் தற்போது மீண்டும் கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.13,370க்கு விற்பனையாகிறது. ஆனால் வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி, ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வு குறித்து நகை வியாபாரிகள் கூறுகையில், ‘சர்வதேச சந்தையில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் டாலர் மதிப்பு மாற்றங்களே இந்த திடீர் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்’ என்று தெரிவித்தனர்.
