*முதலமைச்சர் விஜய் பேனர்களை அகற்றாதது ஏன்? என வாக்குவாதம்
நாகர்கோவில் : நாகர்கோவிலில் அண்ணாமலை இயக்கத்தினர் வைத்திருந்த உறுப்பினர் சேர்க்கை பேனர்களை போலீசார் திடீரென அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, வீ த லீடர்ஸ் என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறார். கியூ ஆர் கோடு வெளியிட்டும், ஆன்லைன் மூலமும் இந்த இயக்கத்துக்கு உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் மீனவ கூட்டுறவு இணைய முன்னாள் மாவட்ட தலைவர் சகாயம் உள்பட பலரும் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளனர். இந்த நிலையில் இயக்கத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் வகையில், வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பில் ஆங்காங்கே கியூ ஆர் கோடு வசதியுடன், பேனர்கள் வைத்திருந்தனர். நாகர்கோவிலில் வடசேரி, புத்தேரி, இறச்சகுளம், திட்டுவிளை, துவரங்காடு உள்ளிட்ட பல இடங்களில் இந்த பேனர்கள் இருந்தன.
இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் இருந்த அண்ணாமலை இயக்கத்தின் பேனர்களை போலீசார் நேற்று திடீரென அகற்றினர். இது பற்றி அறிந்ததும் அந்த இயக்கத்தினர் வந்து கேட்ட போது, 48 மணி நேரத்துக்கு மேல் எந்த பேனரும் இருக்க கூடாது என கூறினர்.
அப்போது முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் பேனர்கள் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாகவே வைக்கப்பட்டு இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. அதை அகற்றுங்கள் என கூறினர்.
ஆனால் போலீசார் அதை கண்டு கொள்ளாமல் அண்ணாமலை இயக்கத்தினர் வைத்திருந்த பேனர்களை அகற்றினர். இது குறித்து அந்த இயக்கத்தில் இணைந்துள்ள சகாயம் கூறுகையில், மாவட்டம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் பேனர்கள் வைத்திருந்தோம்.
அனுமதி பெற்று தான் வைத்து இருந்தோம். இது நிகழ்ச்சிக்கான பேனர் அல்ல. உறுப்பினர் சேர்க்கை பேனர் ஆகும். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தான் வைத்திருந்தோம். ஆனால் காவல்துறை பாரபட்சத்துடன், எங்களது இயக்க பேனரை மட்டும் அகற்றி உள்ளனர் என்றார்.
