×

இந்து, சீக்கியம், பவுத்த மதங்களை பின்பற்றும் பட்டியலினத்தவர் மட்டுமே தனி தொகுதியில் போட்டியிட கோரிய வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில், பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்ட 44 தனித் தொகுதிகளில் இந்து, சீக்கியம் மற்றும் பவுத்த மதங்களை பின்பற்றும் பட்டியல் இனத்தவர்களை மட்டுமே போட்டியிட அனுமதிக்க வேண்டும் எனக்கோரி இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் தேர்தலுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், 44 தனித் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 90 சதவீதத்தினர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள். அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கை பிறப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, தனித்தொகுதிகளில் போட்டியிடும் பட்டியலின வேட்பாளர்களின் சாதிச் சான்றுகளை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். போலி சான்றிதழ்கள் சமர்ப்பித்துள்ளது கண்டறியப்பட்டால் அந்த வேட்புமனுக்களை நிராகரிக்க தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி, தேர்தல் ஆணையம் 2008ம் ஆண்டே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதேசமயம், தேர்தல் அதிகாரிகளின் ஆய்வில் தப்பித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், சம்பந்தப்பட்டவர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடரலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Tags : Chennai ,Tamil Nadu ,Arjun Sampath ,
× RELATED நான் முதல்வன் திட்டத்தின் பெயரை...