×

திருத்தணியில் கடந்த 4 மாதங்களுக்கு முன் சரிவர ஆடு மேய்க்காத சிறுவன் சரமாரி அடித்து கொலை: தாய், மகன்கள் சித்ரவதை; 2 பேர் கைது

 

திருத்தணி: திருத்தணி அருகே முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (48). இவர், அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து, ஆடு மற்றும் கோழி பண்ணை நடத்தி வருகிறார். இவரது பண்ணையில் வேலை செய்வதற்கு திருத்தணி, இந்திரா நகரை சேர்ந்த வினோத் என்பவர், தனது சகோதரி வெண்ணிலா மற்றும் அவரது 3 மகன்களையும் வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து, கடந்த 8 மாதங்களாக தாய் வெண்ணிலா மற்றும் 3 மகன்களும் ஆட்டு பண்ணையில் தங்கி, ஆடு மேய்க்கும் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுடன் வெண்ணிலாவின் சகோதரர் வினோத்தும் வேலைபார்த்துள்ளார்.

இதற்கிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன் வெண்ணிலாவின் மூத்த மகன் சுரேஷ் (15) என்பவர் சரிவர ஆடு மேய்க்கவில்லை எனக் கூறி, ஆட்டு பண்ணை உரிமையாளர் முருகன் சரமாரி அடித்து உதைத்ததில் பரிதாபமாக இறந்துள்ளார். பின்னர் இச்சடலத்தை வெண்ணிலாவின் சகோதரர் வினோத்தின் உதவியுடன், பண்ணை அருகே மண்ணுக்குள் புதைத்துவிட்டு, அதன்மேல் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் சிமென்ட் தரை போல் பூசி மறைத்துள்ளனர். மேலும், சிறுவன் சுரேஷ் கொலை செய்யப்பட்டது வெளியில் தெரியாமல் இருக்க, அவரது தாய் வெண்ணிலா மற்றும் 2 சிறுவர்களையும் ஆட்டு பண்ணையில் அடைத்து வைத்து ஆட்டு பண்ணை உரிமையாளர் முருகனும் வினோத்தும் சேர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ஆட்டுப் பண்ணையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த தாய் வெண்ணிலா நேற்று அங்கிருந்து தப்பி வெளியேறினார். பின்னர், திருத்தணி காவல் நிலையத்தில், தனது மூத்த மகன் சுரேஷை கொலை செய்து, தன்னுடன் மற்ற 2 மகன்களையும் பண்ணையில் அடைத்து வைத்து கடந்த 4 மாதங்களாக சித்ரவதை செய்து வந்திருப்பது குறித்து வெண்ணிலா புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் திருத்தணி போலீசார் கொலை உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, நேற்றிரவு திருவள்ளூரில் பதுங்கியிருந்த ஆட்டு பண்ணை உரிமையாளர் முருகன் மற்றும் வினோத் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

மேலும், ஆட்டு பண்ணையில் சிறுவன் சுரேஷ் அடித்து கொலை செய்யப்பட்ட இடத்தில் இன்று காலை திருத்தணி போலீசார் நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், சிமென்ட் தரையை உடைத்து, மண்ணுக்குள் புதைக்கப்பட்ட சிறுவன் சுரேஷின் சடலத்தை போலீசாரின் முன்னிலையில் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags : Sirawara ,Trithani ,Thiruthani ,Murugan ,Murukhampattu ,Tirudhani ,Indra ,
× RELATED ‘இன்ஸ்டா’ வாலிபருடன் காதல் இளம்பெண்...