×

தவெக ஆபீஸ் திறப்பு விழாவில் பள்ளி சீருடையுடன் மாணவர்கள்: சேலம் அருகே பரபரப்பு

 

சேலம்: சேலம் அருகே தவெக அலுவலக திறப்பு விழாவிற்கு அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சீருடையில் அழைத்துவரப்பட்டிருந்தனர். அவர்கள் 2 மணி நேரம் காக்கவைக்கப்பட்ட நிலையில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திப்பம்பட்டியில் தவெக அலுவலகத்தின் திறப்பு விழா நேற்று நடைபெறுவதாகவும், இதில் வீரபாண்டி எம்எல்ஏ பழனிவேல் கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தவெக அலுவலக திறப்பு விழாவிற்காக குரால் நத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பயிலும் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் ஞாயிறு விடுமுறை நாளான நேற்று சீருடையில் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

மதியம் 2 மணிக்கு நிகழ்ச்சி என்று வரவழைக்கபட்ட நிலையில் மாலை 4 மணியளவிலேயே எம்எல்ஏ பழனிவேல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தார். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அரசு பள்ளி மாணவ, மாணவிகள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது. விடுமுறை நாளான நேற்று கட்சி அலுவலக திறப்பு விழாவிற்கு பள்ளி மாணவ, மாணவிகளை சீருடையுடன் அழைத்து வந்த பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Thaveka ,Salem ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில்...