×

லண்டன் நிகழ்ச்சியில் கூச்சல் போட்டு தலைமை நீதிபதிக்கு எதிர்ப்பு: இந்திய தூதரகம் கண்டனம்

லண்டன்: லண்டன் பல்கலைக்கழகத்தின் பிர்க்பெக் கல்லூரியில் கடந்த ஜூன் 4ம் தேதியன்று ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் சர்வதேச சட்டம்’ என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் பங்கேற்று உரையாற்றினார். இந்தியாவில் நிலவும் ஜனநாயக முறை மற்றும் சட்டத்தின் மாண்புகள் குறித்து அவர் ஆற்றிய உரையைத் தொடர்ந்து, பார்வையாளர்களுடன் கலந்துரையாடும் பகுதி தொடங்கியது.

அப்போது அங்கிருந்த சிலர் இந்திய நீதிபதியின் உரைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதுடன், விவாதப் பொருளுக்கு தொடர்பில்லாத கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், பெண் ஒருவர் இந்தியாவில் மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்கள் ஒடுக்கப்படுவதாகக் கூறி, நீதிபதி ஏற்கனவே கூறியதாகச் சொல்லப்படும் ‘கரப்பான் பூச்சி’ குறித்த கருத்தை முன்வைத்து கேள்வி எழுப்ப முயன்றார். அப்போது குறுக்கிட்ட நெறியாளர், செயற்கை நுண்ணறிவு தொடர்பான விவாதத்தில் அரசியல் ரீதியான கேள்விகளை தவிர்க்குமாறு கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த ஒரு சிலர், ‘எங்களுக்கு உரிய மரியாதையை வழங்குங்கள்’ என்று உரக்கக் கத்தி ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள லண்டனில் உள்ள இந்திய தூதரகம், ‘நாகரிகமற்ற முறையில் பார்வையாளர்கள் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது; ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயற்கை தான், ஆனால் அதனை நாகரிகமான முறையில் வெளிப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

Tags : Indian Embassy ,Chief Justice ,London ,Birkbeck College ,University of London ,Indian Supreme Court ,Justice ,Surya Kant ,India… ,
× RELATED தீவிரமடையும் நெருக்கடிகள் பொருளாதார நிலை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை