பணவீக்கம், எரிபொருள் விலை உயர்வு காரணமாக பாஜ அரசு மீது மக்கள் கோபம் – மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: விலைவாசி உயர்வு, பணவீக்கம் மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, அனைத்துத் தரப்பு மக்களும் மோடி தலைமையிலான அரசின் மீது கோபத்தில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி இருக்கிறார்.

ஏழை மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனற்றதாகவே ஒன்றிய அரசு திகழ்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். சில நாட்களாக உலகளாவியளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக சரிந்து வரும் நிலையிலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்படுவது நியாயமற்ற செயல் என்று மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்து உள்ளார்.

இப்போது மட்டுமல்ல கடந்த 12 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்த போதெல்லாம் கூட மக்களுக்கு ஏன் உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அடிக்கடி உயர்த்தப்படும் எரிபொருள் விலையானது ஏழைக் குடும்பங்கள் மீதான ஒரு “சத்தமில்லா தாக்குதல்” என்று அவர் குறிப்பிட்டார். பொருளாதார ஏற்றத்தாழ்வை உருவாக்கும் வகையில் ஏழைகள் தொடர்ந்து மேலும் ஏழ்மையடைந்து வரும் நிலையில், ஒன்றிய அரசு கோடீஸ்வரர்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். பிரதமர் நாட்டுக்காகத் தியாகம் செய்வதாகக் கூறிக்கொள்கிறார். ஆனால் பணவீக்கமும் வேலையின்மையும் தொடர்ந்து அதிகரித்து, தொழிற்சாலைகள் மூடப்பட்டால் என்ன நடக்கும்..? இந்த அரசின் மீது நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்று கார்கே குறிப்பிட்டு உள்ளார். மேலும் பிரதமர் இவர்கள் நாட்டை ஆள விரும்புகிறாரா அல்லது சுற்றுலாப் பயணிகளைப் போலப் பல்வேறு நாடுகளைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: