சென்னை: தமிழ்நாடு மாநில அரசின் நிர்வாகத் தலைமையிடமாக இருக்கும் தலைமைச்செயலகத்திற்கும், கட்சி அலுவலகத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்களாக தவெக-வினர் இருப்பதாக, எதிர்க்கட்சியான திமுக கடுமையாக சாடி உள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மூன்று எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த சில நிமிடங்களிலேயே, அதுவும் தலைமை செயலகத்திலேயே வைத்து கட்சி தாவி இருக்கும் நிலையில், யாருக்கெல்லாம் பணம் சென்றது என்பது குறித்த தகவல் வெளிவரும். அதே போல தவெக-விற்கு எதற்காக கட்சி தாவி இருக்கிறார்கள், என்ற தகவலும் விரைவில் அதிகாரபூர்வமாக வெளிவரும் என்றார்.
இதனிடையே தமிழ்நாடு மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு தலைமைச் செயலகத்துக்குள் அதிகாரத் திமிரில் அமர்ந்துகொண்டு, எதிர்கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் அருவருப்பான ‘குதிரை பேரத்தை’ (Horse Trading) கூச்சமே இல்லாமல் நடத்துகிறீர்களே.. இதுதான் நீங்கள் முழங்கிய மாற்று அரசியலா?
தலைமைச் செயலகத்திற்குள் வைத்து ‘நிழல் முதல்வர்’ முன்னிலையில் உங்கள் கட்சியில் இணைக்கிறீர்கள் என்றால், அரசாங்க அலுவலகத்தை எந்த அளவுக்குக் கேவலப்படுத்தி வைத்திருக்கிறீர்கள்? இது அரசு அலுவலகமா அல்லது உங்கள் கட்சியின் வியாபாரக் கூடமா? என்று திமுக சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.

