செங்கம், மே 25: வீட்டில் தனியாக வசித்து வரும் 70 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தாலியை பறித்து சென்ற வாலிபரை தனிப்படை போலீசார் பெங்களூருவில் சுற்றிவளைத்து கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. இவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர், மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அவரை சரமாரி தாக்கி, அவரது கழுத்தில் இருந்த 2 சவரன் தாலியை பறித்துக்கொண்டு தப்பினார். இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்து நகையை பறித்து சென்றது அதே பகுதியை சேர்ந்த அஜய்(27) என்பதும், அவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கியிருப்பதும் தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூருவுக்கு சென்று அஜய்யை நேற்று கைது செய்தனர்.
