சேலம்: ஏற்காட்டில் இன்று 49-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
பல்லாயிரக்கணக்கான வண்ண மயமான நவீன அலங்கார மின் விளக்குகளால் நகரம் முழுமையாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது. ஏற்காடு நகரின் முக்கிய அடையாளங்களை கொண்ட அண்ணா பூங்கா, எரிச்சாலை, படகு இல்லம், ரோஜா தோட்டம் மற்றும் சேர்வராயன் கோவில் என அனைத்து பகுதிகளிலும் விதவிதமான எல்.இ.டி மற்றும் லேசர் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த விளக்குகள் அனைத்தும் இரவு நேரங்களில் ஒளிரவிடும்போது ஒட்டுமொத்த ஏற்காடு நகரமும், மலையும் ஒளி வெள்ளத்தில் மிதந்தது. லட்சக்கணக்கான வண்ண மலர்களைக் கொண்டு பிரமாண்டமான உருவ அமைப்புகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மலர்க்கண்காட்சியின் அழகை நேரில் காண்பதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் கர்நாடக, கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏரளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
இந்த 7 நாட்கள் தொடந்து நடைபெறும் கோடை விழாவில் சுற்றுலா பயணிகளையும் மற்றும் உள்ளூர் பொதுமக்களையும் கவரும் வகையில் தினந்தோறும் மாலையில் கலை நிகழ்ச்சிகள், நவீன நடனப்போட்டிகள், நாய் கண்காட்சி, சமையல் போட்டிகள், கோலப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மேலும், அரசின் பல்வேறு துறைகளின் சாதனை விளக்கக் கண்காட்சிகளும் விரிவான முறையில் அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
