×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 23ம் தேதி திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்: மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்

 

சென்னை: திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் வரும் 23ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தமிழக சட்டசபை தேர்தல் தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது. இக்குழு தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அந்த கள ஆய்வு குழுவினரிடம் திமுகவினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும்.

தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்.நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்கு தேவை” என்று அறிவித்திருந்தார். அதன்படி சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆய்வு குழு நேற்று முன்தினம் முதல் தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆய்வை தொடங்கியுள்ளது. மாவட்ட செயலாளர், தொகுதி பார்வையாளர், வேட்பாளர்கள், தொகுதிக்கு உட்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை தனித்தனியாக சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகிறது.

அதோடு மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்களையும் தனித்தனியே சந்தித்து அவர்களின் கருத்துக்களையும் அறிந்து வருகிறது. தொடர்ந்து இந்த குழு ஜூன் 5ம் தேதி தனது அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அளிக்க உள்ளது. அதே நேரத்தில் ஒவ்வொரு திமுக மாவட்ட செயலாளர்களும் மாவட்ட கூட்டத்தை கூட்டி கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்தி வருகின்றனர். தேர்தல் தோல்வி நிரந்தரம் அல்ல. மீண்டும் அடுத்த தேர்தலில் நாம் வெற்றி பெற்று விடலாம் என்று நம்பிக்கையூட்டி வருகின்றனர். இந்த நிலையில், திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் வரும் மே 23-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: திமுக இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் வருகிற 23ம் தேதி(சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. துணை செயலாளர்கள் முன்னிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்பி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இக்கூட்டத்தில் ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்தநாள், திமுக இளைஞர் அணி ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் ஆலோசனை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

Tags : DMK Youth Wing Executives Meeting ,Anna Arivalayam, Chennai ,MK Stalin ,Chennai ,DMK Youth Wing Executives ,Tamil Nadu Assembly Election ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள 40,000க்கும் மேற்பட்ட...