ஆவடி, மே 7:ஆவடி நந்தவன மேட்டூர், குமரன் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்(26), காஸ் டெலிவரி ஊழியர். இவர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியைச் சேர்ந்த தேவா என்பவருடன் மது போதையில் வீண் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த தேவா நண்பர்களுடன் சென்று சுந்தரை தாக்கியும், கத்தியால் இடது கையில் கிழித்தும் கொலை மிரட்டல் விடுத்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஆவடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தேவாவின் நண்பர்களான ஆவடி பழைய அக்ரகாரம் தெருவைச் சேர்ந்த ஜெயசூரியா(24), செங்குன்றம் கோணிமேடை பகுதியைச் சேர்ந்த பிரதீப்(26) ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவான தேவா உட்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
