திருவனந்தபுரம் : எர்ணாகுளம் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கொல்லம் அருகே உள்ள மன்றோதுருத்து பகுதியைச் சேர்ந்தவர் பைஜு.
இவரது மனைவி சிப்பி (32). நேற்று முன்தினம் இவர் எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம் செல்வதற்காக எர்ணாகுளம் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்தார். அவர் நடைமேடைக்கு வருவதற்குள் ரயில் புறப்படத் தொடங்கியது. ஓடிச் சென்று அவர் அந்த ரயிலில் ஏற முயன்றார்.
அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி ரயிலுக்கு அடியில் விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் சிப்பியின் உடல் மீது ரயில் ஏறியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், சிப்பியின் உடலை மீட்ட ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிப்பிக்கு தேவானந்த் என்ற மகனும், தேவநந்திதா என்ற மகளும் உள்ளனர்.
