துறையூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து கோவை நோக்கி 36 பயணிகளுடன் ஆம்னி பஸ் நேற்றிரவு புறப்பட்டது. திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கிழக்குவாடி பகுதியில் இன்று அதிகாலை 12.30 மணிக்கு சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சிறிய பால கட்டையை உடைத்து கொண்டு சாலையோரத்தில் இருந்த 10 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த பயணிகள் கூச்சலிட்டனர்.
அப்போது பஸ்சில் பயணித்த சில இளைஞர்கள், பின்பக்க கண்ணாடியை உடைத்து பயணிகளை வெளியே மீட்டனர். இந்த விபத்தில் 11 பெண்கள் உட்பட 26 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து துறையூர் போலீசார் விரைந்து சென்று 26 பேரையும் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
