×

புதிய தலைநகருக்காக நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 குத்தகை தொகை – ஆந்திர முதல்வர்

ஆந்திர மாநில தலைநகரான அமராவதியை உருவாக்க, விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தும் பணியின் இரண்டாம் கட்டத்தை மேற்கொள்ள ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தங்கள் நிலங்களை ஒப்படைக்கும் விவசாயிகளுக்குத் துணையாக நிற்கும் வகையில், அம்மாநில அரசு தற்போது முக்கிய முடிவை எடுத்துள்ளது.

மாநிலத்திற்காக ஒரு புதிய பசுமைத் தலைநகரை (Greenfield capital city) உருவாக்கும் நோக்கில், ‘நில ஒருங்கிணைப்புத் திட்டத்தின்’ (LPS) இரண்டாம் கட்டத்தின் கீழ் தங்கள் நிலங்களை ஒப்படைத்துள்ள மற்றும் ஒப்படைக்க போகும் விவசாயிகளுக்கு, மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முக்கியச் சலுகைகளை அறிவித்துள்ளார். இந்த விவசாயிகளுக்கு, பத்து ஆண்டுகளுக்கு 1 ஏக்கருக்கு ஆண்டு வாடகையாக (குத்தகை தொகை) ரூ.40,000 வழங்கப்படும் என்று அவர் அறிவித்து உள்ளார். முன்னதாக ஏக்கருக்கான ஆண்டு வாடகை ரூ. 30,000 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ரூ. 40,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

குத்தகை தொகையை உயர்த்தி அறிவித்ததோடு மட்டுமல்லாமல், நிலத்தை கொடுக்கும் விவசாயிகளுக்குக் கூடுதல் நிதிச் சலுகைகளையும் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த குத்தகை தொகையில் ஆண்டுதோறும் ரூ.3,000 உயர்வு இருக்கும் என்றும், தலைநகரை நிர்மாணிக்க தங்கள் நிலங்களை ஒப்படைத்த ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும், ரூ. 1.5 லட்சம் வரையிலான பயிர்க் கடன்கள் வழங்கப்படும் என்றும் சந்திரபாபு நாயுடு உறுதி அளித்து உள்ளார். இதனிடையே புதிய ஆந்திர தலைநகருக்காக இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலம் குறித்த விவரங்களை ஆய்வு செய்த போது, ​​முதல் கட்டமாக 31,150 விவசாயிகள் சுமார் 34,983 ஏக்கர் நிலத்தை அரசிடம் ஒப்படைத்துள்ளனர். தற்போது, ​​இரண்டாம் கட்டத்தின் கீழ் கூடுதலாக 40,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்த மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன.

அமராவதியை ஒரு உலகத்தரம் வாய்ந்த நகரமாக உருவாக்க கூடுதல் நிலம் தேவைப்படுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் சந்திரபாபுவும் பல சந்தர்ப்பங்களில் இதனை வலியுறுத்தியுள்ளார். அமராவதியைச் சுற்றி ‘உள் வட்டச் சாலை’ அமைத்தல், ரயில் நிலையம் நிறுவுதல், புதிய ரயில் பாதைகளை அமைத்தல் மற்றும் ‘சர்வதேச விளையாட்டு நகரம்’ உருவாக்குதல் போன்ற பிரம்மாண்டமான திட்டங்களுக்காகவே, இந்த கூடுதல் நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.

Tags : AP ,AP government ,Amravati ,Government of the State ,
× RELATED ரூ.200 கோடி பணமோசடி வழக்கில் நடிகை...