×

தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் உறுதி: மக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ், ஒமிக்ரான் குடும்பத்தைச் சேர்ந்த ஆர் எப்.5 துணை வகை என்பது மரபணு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக வீரியம் கொண்டதல்ல என்றும் பெரும்பாலானோருக்கு லேசான பாதிப்பையே ஏற்படுத்துவதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் பரிசோதனை செய்யப்பட்ட 20 மாதிரிகளிலும் ஆர் எப்.5 துணை வகை வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனாவால் 15 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். பொது மக்கள் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவதுடன், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், சிறுநீரக நோயாளிகள், புற்றுநோயாளிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பெரிய கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும்.

தற்போது அதிக ஆபத்து உள்ளவர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு முன் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் வழக்கமான கண்காணிப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2026ம் ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டில் 335 கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 2025ம் ஆண்டில் 1,250 பேருக்கும், 2024ம் ஆண்டில் 990 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவை அனைத்தும் வழக்கமான கண்காணிப்பு மூலம் கண்டறியப்பட்டவை என்றும், பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்ததாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED ‘வான்டார்’ நிறுவனம் வெளியிட்ட பகீர்...