நாகை: நாகை கடற்கரையில் தவெக அரசுக்கு எதிராக விவசாயிகள் திதி கொடுத்து நூதன போராட்டம் நடத்தினர். தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார். தேர்தல் முடிந்து விஜய் முதல்வராக பொறுப்பேற்று விட்டார். ஆனால் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ரூ.75,000 வரை பெற்ற பயிர்கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள் டெல்டா மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக பயிர் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு இறந்து விட்டது என்று கூறி நாகை புதிய கடற்கரையில் தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் திதி கொடுக்கும் நூதன போராட்டம் இன்று காலை நடந்தது.மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் விஜயராஜ், மாவட்ட செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் கடற்கரையில் இறந்தவர்களுக்கு செய்வது போல் திதி கொடுத்தனர்.
தேர்தல் அறிக்கையில் கூறியவாறு கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை ஒன்றிய, மாநில அரசு வேடிக்கை பார்க்க கூடாது என்றும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
