டெல்லி: அண்மையில் நடந்த நீட் மறுதேர்வில் ஒரு கேள்வி தவறாக கேட்கப்பட்டதை தேசிய தேர்வு முகமை ஒப்புக் கொண்டது. மற்றொரு கேள்விக்கு 2 விடைகள் சரியானது; அந்த கேள்விக்கு 2 விடைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்த மாணவர்களுக்கு 4 மதிப்பெண் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமையின் விடைக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் முறைகேடு புகார்களைத் தொடர்ந்து ஜூன் 21-ம் தேதி நடத்தப்பட்ட நீட் மறுதேர்வில் ஒரு கேள்வி தவறாக கேட்கப்பட்டதை தேசிய தேர்வு முகமை ஒப்புக் கொண்டது. குறிப்பாக, இயற்பியல் (Physics) வினாத்தாளில் இரண்டு முக்கிய தவறுகள் கண்டறியப்பட்டுள்ளன. தேர்வில் மொத்தம் 180 பலவுள் தெரிவு வினாக்கள் இருந்தன, ஒவ்வொரு சரியான விடைக்கும் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களுக்கு தலா 45 வினாக்கள் என மொத்தம் 720 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இதில் இயற்பியல் பாடப்பிரிவில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கொடுக்கப்பட்ட நான்கு விடைகளும் தவறாக இருந்தன, தவறாக கேட்கப்பட்டதை தேசிய தேர்வு முகமை ஒப்புக் கொண்டது. மற்றொரு கேள்விக்கு இரண்டு விடைகள் சரியாக உள்ளன. அந்த இரண்டு விடைகளில் எதனை மாணவர்கள் தேர்வு செய்திருந்தாலும் அவர்களுக்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த கல்வி நிபுணர் ஹர்பிரீத் சிங் இது குறித்துக் கூறுகையில், “வெர்னியர் காலிப்பர்ஸ் (Vernier Callipers) தொடர்பான 40-வது கேள்வியில் சரியான விடை 1.6 செ.மீ ஆகும். ஆனால், கொடுக்கப்பட்ட 4 ஆப்ஷன்களிலும் இந்த விடை இல்லை. அதேபோல், மின்காந்த அலைகள் (Electromagnetic waves) தொடர்பான 22-வது கேள்வியில் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு ஆப்ஷன்களுமே சரியாக உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
தேசிய தேர்வு முகமையின் விதிமுறைப்படி, ஒரு கேள்வி தவறாக இருந்தாலோ அல்லது நீக்கப்பட்டாலோ, அந்தத் தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், அவர்கள் அந்த கேள்வியை எதிர்கொண்டாலும் இல்லாவிட்டாலும் 4 மதிப்பெண்கள் போனஸாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து மத்திய கல்வி அமைச்சகமோ அல்லது தேசிய தேர்வு முகமை அமைப்போ இதுவரை அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.
