×

மணப்பாறை தேசிய நெடுசாலையில் மக்கள் திடீர் சாலை மறியல்: போக்குவரத்து முடங்கியது

 

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கே.பெரியப்பட்டி என்ற இடத்தில் சிப்காட் தொழில்பேட்டை அமைந்துள்ளது. கே.பெரியப்பட்டி கிராமத்திற்கு செல்லும் பிரிவு சாலை பகுதியில் சென்டர் மீடியன் வழியை ஏற்படுத்தி அதை அந்த ஊர் மக்கள் பயன்படுத்து வந்தனர். நீண்ட காலமாக இந்த வழியை பயன்படுத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் சென்டர் மீடியனை நெடுஞ்சாலை துறையினர் அடைத்தனர். ஆனால் மீண்டும் அந்த அடைப்பை உடைத்து பொதுமக்கள் அதில் சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மண்ணை கொட்டி அந்த வழியை அடைத்துள்ளனர்.

இதனால் பள்ளி, மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், 3 கி.மீ.சுற்றி வருவதாகவும் கூறிய மக்கள் 200க்கும் மேற்பட்டோர் திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. தகவல் அறிந்து வந்து மணப்பாறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அதிகாரிகள் வந்து எங்களுக்கு உத்தரவாதம் அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ. மற்றும் மணப்பாறை வட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி நெடுஞ்சாலைத்துறையிடம் பேசி தீர்வு எட்டப்படும் என உறுதி அளித்தனர். மேலும் தற்போது ஜேசிபி மூலம் செண்டர் மீடியனில் உள்ள மண்ணை அகற்றுவதாகவும் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு களைந்து சென்றனர். இந்த பொதுமக்கள் மறியல் போராட்டத்தால் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags : Manapparai National Highway ,Trichy ,Sipcot Industrial Estate ,K. Periyapatti ,Trichy National Highway ,Manapparai ,Trichy district ,
× RELATED நீட் மறுதேர்வில் நடந்த குளறுபடிகள்:...