சென்னை: தமிழ் திரையுலகின் இளம் மற்றும் திறமையான நடிகர்களான ஆனந்த் ராம் மற்றும் பிரிகிடா ஜோடி, தங்களது காதலை நெகிழ்ச்சியுடன் சமூக ஊடகப் பதிவின் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். திரையுலகில் ‘மீசைய முறுக்கு தம்பி’ என்றும், ‘பவி டீச்சர்’ என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இந்த ஜோடி, தற்போது தமிழ் சினிமாவின் நிஜ வாழ்க்கை ஜோடிகளின் பட்டியலில் இணைந்து ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர் என்கிறது சினிமா வட்டாரம்.
இவர்களது திருமணம் இந்த ஆண்டே நடைபெறவுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இவர்களது நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இது குறித்து இந்த ஜோடி வெளிட்ட அறிக்கை:
இத்தனை ஆண்டு காலமாக எங்கள் மீது அளவற்ற அன்பையும் ஆதரவையும் பொழிந்து வரும் எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், சக திரையுலகினர், பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் மற்றும் அன்பு ரசிகர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தூணாக நின்ற நீங்கள், எங்களது இந்த புதிய தொடக்கத்திற்கும் உங்கள் ஆசிகளையும் வாழ்த்துகளையும் வழங்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
