பொன்னேரி, ஆக.1: மீஞ்சூரில் முகவரி கேட்பதுபோல நடித்து மூதாட்டியிடம் 4.5 சவரன் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சூர்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயா(70). இவர் நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள கடைவீதிக்கு சென்று தனக்கு தேவையான மாத்திரை மருந்துகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார். வீட்டின் அருகே வந்தபோது இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து வந்த வாலிபர் மூதாட்டியிடம் முகவரி கேட்டுள்ளார்.
பின்னர், முகவரியை கேட்ட வாலிபர் சிறிது தூரம் சென்று மீண்டும் திரும்பி வந்து மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 4.5 சவரன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது, மூதாட்டி சங்கிலியை கையால் பிடித்ததால் சிறிது தூரம் இழுத்த செல்லப்பட்டு செயினை பறித்து வாலிபர் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.
கீழே விழுந்து மூதாட்டி அலறி துடித்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
