கன்னியாகுமரி: தமிழக முதல்வர் விஜய் காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா செல்ல உள்ளார். இதற்கு தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் முதல்வர் விஜய்யின் இந்த கர்நாடக பயணம் தேவையற்றது என விமர்சித்து உள்ளார்.
கடந்த கால வரலாற்றை நினைவுபடுத்தி பாருங்கள்.. கர்நாடக அரசுடன் நடத்தப்பட்ட எந்தவொரு பேச்சு வார்த்தையிலும் தமிழகத்திற்கு நீதி கிடைத்தது இல்லை. இந்த சூழலில் அங்கு போய் தண்ணீரைத் தூக்கி கொண்டா வரப்போறீங்க? என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவையே மதிக்காத கர்நாடக ஆட்சியாளர்களிடம் பேசுவது வீண் செயல் என்றும் தவெக அரசின் முடிவை கடுமையாக சாடியுள்ளார். உங்களால தண்ணிய வாங்கிட்டு வர முடியாது. ஆனால் அணை கட்ட வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கை.
அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் ஒரு விரிவான தீர்மானம் என்பது நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தண்ணீர் பெற்றுவர முடியாத அல்லது அணை கட்டும் விவகாரத்தில் மாற்றம் செய்ய முடியாத சூழலில் எதற்கு தான் இந்த தேவையற்ற பயணம் என கேள்வி எழுப்பி, விஜய் தனது பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின் படியும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படியும் தமிழகத்திற்குரிய நீரை பெறச் சட்டப் போராட்டம் நடத்துவதே சரியான வழி, அதை விட்டு இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவது தமிழகத்தின் பல ஆண்டு சட்டப்பூர்வ உரிமைகளை சிதைக்கும் என்றும் பெ. சண்முகம் எச்சரித்துள்ளார்.
