தண்டராம்பட்டு: திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து நேற்று திருப்பூருக்கு அரசு பேருந்து சென்றது. தென்பெண்ணை ஆற்றங்கரை கொலமஞ்சனூர் வலது கரை ஓரத்தில் உள்ள புத்து கோயிலுக்கு செல்வதற்காக டிரைவர் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு சென்றார். அப்போது, பேருந்தின் பின்பகுதியில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதைக்கேட்ட பயணிகள் பேருந்தின் பின்னால் இருந்த சீட்டில் திரும்பி பார்த்தனர்.
அப்போது 2 பேர், முன் சீட்டில் அமர்ந்திருந்த வாலிபரை கத்தியால் வெட்டிக் கொண்டிருந்தனர். பின்னர், 2 பைக்கில் வந்த மேலும் 2 பேர் பேருந்தின் உள்ளே சென்று வாலிபரை சரமாரியாக வெட்டினர். இதைப்பார்த்த பேருந்தின் முன் பக்க சீட்டில் அமர்ந்திருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து வெளியே அலறியடித்து ஓடினர். பின்னர் 4 பேரும் தப்பிச் சென்றனர். தகவலின்படி தண்டராம்பட்டு போலீசார், வந்து கத்தியால் வெட்டப்பட்ட வாலிபரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், ‘திருவண்ணாமலை அருகே ஆனந்தல் கிராமத்தை சேர்ந்த சிவசங்கர்(32), கூலி தொழிலாளி’ என்பது தெரியவந்தது.
