அருப்புக்கோட்டை, ஜூலை 29: அருப்புக்கோட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், ரூ.34 கோடியில் 6 தளங்களுடன் புதிய கட்டிடம் திறக்கப்பட்ட நிலையில், முதல் தளத்தை தவிர மீதமுள்ள ஐந்து தளங்களும் செயல்படாத நிலையில் உள்ளது. எனவே அனைத்து தளங்களையும் விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்து கூடுதல் மருத்துவர்களையும் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோட்டில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட இந்த மருத்துவமனைக்கு அருப்புக்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பாளையம்பட்டி, பந்தல்குடி, திருச்சுழி, காரியாபட்டி, பரளச்சி, ரெட்டியபட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். மேலும், விளாத்திகுளம், கமுதி போன்ற பிற மாவட்டங்களான தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்குள்ள பிரசவ வார்டு பகுதியில் தினந்தோறும் 8 முதல் 10 பிரசவங்கள் வரை நடைபெறுகிறது. அருப்புக்கோட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை முறை தரமானதாக இருப்பதால் பொதுமக்கள் வேறு தனியார் மருத்துவமனைக்கு அதிகம் செல்லாமல் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
