அண்ணாநகர் ஜூலை 27: முகப்பேர் மேற்கு 2வது பிளாக் பகுதியை சேர்ந்தவர்கள் ஆனந்த் (28), தோட்டா ராம் (31), சீனிவாசன் (29), மூவரும் நண்பர்கள். இதில் தோட்டா ராம் மற்றும் சீனிவாசன் இருவரும் ரவுடிகள். ஆனந்த் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் மூன்று பேரும் முகப்பேர் மேற்கு 2வது பிளாக்கில் உள்ள காலி இடத்தில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது மது போதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு தோட்டாராம், சீனிவாசன் ஆகியோர் சேர்ந்து ஆனந்தை தாக்கியுள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து தப்பித்த ஆனந்த் தன்னுடைய வீட்டிற்கு சென்று விட்டார்.
ஆனந்தை பின் தொடர்ந்து வந்த தோட்டாராம், சீனிவாசன் ஆகியோர் ஆனந்த் வீட்டிற்கு சென்றனர். வீட்டில் ஆனந்தின் சகோதரர் மட்டும் இருந்ததால் சீனிவாசனும், தோட்டாராமும் அருணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் தோட்டாரம் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் அருணின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். தாக்குதலில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த அருணை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து கோபம் அடங்காத தோட்டாராம், சீனிவாசன் இருவரும் ஆனந்தின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.
இதுகுறித்து நொளம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தோட்டாராம் மற்றும் சீனிவாசனை தேடி வருகின்றனர். மேலும் ஆனந்தை காவல் நிலையத்தில் அடைத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
