குமாரபாளையம், ஜூலை 27: குமாரபாளயைத்தில் சோதனை என்ற பெயரில் வியாபாரிகளை மிரட்டும் அலுவலர்களை கண்டித்து, அனைத்து வணிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குமாரபாளையம் அனைத்து வணிகர்கள் சங்க மாதாந்திர கூட்டம், தலைவர் காமராசர் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் பிரகாஷ், துணைத் தலைவர்கள் சேகர், சம்பத், துணை செயலாளர்கள் பஞ்சாலை சண்முகம், பிரபாகர், சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வணிகர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வணிகர்களுக்கு ரூ.5 லட்சத்திற்கான காப்பீடு அடங்கிய வணிகர் நல வாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
சுகாதாரத் துறையின் அனுமதி இல்லாமல், நடைபாதையில் செயல்படும் பாஸ்ட் புட் கடைகளை முறைப்படுத்தி, அவர்களுக்கு லைசென்ஸ் வழங்க வேண்டும். வாடிக்கையாளர்கள் வந்து செல்வதற்கு வசதியாக முக்கிய வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கடந்த ஆட்சியில் வழங்கிய சலுகையை போலவே, இந்த ஆட்சியிலும் வணிகர் நல வாரிய பதிவு கட்டணத்தொகை 500 ரூபாயை தள்ளுபடி செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.
