பரமத்திவேலூர், ஜூலை 27: பரமத்திவேலூர் மற்றும் ஈரோடு பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற வழக்கில் முக்கிய குற்றவாளியை நேற்று ஈரோட்டில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது. இதன்பேரில், போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். இதையடுத்து, பொத்தனூர் மற்றும் ஈரோடு பகுதியைச் சேர்ந்த 8 பேரை கடந்த சில தினங்களுக்கு முன்பு, வேலூர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்நிலையில், போதை மாத்திரைகள் விற்ற வழக்கில், முக்கிய நபரான ஈரோடு குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த சேதுராமன் மகன் ராஜசேகர்(23) என்பவரை வேலூர் போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 150 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
