×

காமன்வெல்த் விளையாட்டு போட்டி; ஆண்கள் பளுதூக்குதலில் வெள்ளி வென்றார் ரிஷிகாந்தா சிங்: ஸ்நேட்ச் முறையில் சாதனை

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் 60 கிலோ எடை பிரிவு பளுதூக்குதலில், இந்திய ராணுவ வீரர் சனம்பம் ரிஷிகாந்தா சிங் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரில், மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா பவர் லிப்டிங் போட்டியில் ஜந்தா குமார் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க வேட்டையை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், நேற்று நடந்த ஆண்கள் பளுதூக்குதல் 60 கிலோ எடை பிரிவு போட்டியில் களமிறங்கிய ரிஷிகாந்தா சிங் ஸ்நேட்ச் முறையில் 121 கிலோ எடை தூக்கி புதிய காமன்வெல்த் சாதனை படைத்தார். கிளீன் மற்றும் ஜெர்க் முறையில் 143 கிலோ தூக்கிய அவர் (மொத்தம் 264 கிலோ) 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை முத்தமிட்டார். நடப்பு தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம் இது.

மலேசியாவின் முகமது அனிக் பின் கஸ்தான் மொத்தம் 273 கிலோ எடை தூக்கி (121 கி. + 152 கி.) தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இவர் 2 பிரிவிலும் காமன்வெல்த் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. கென்யாவின் ஜூஷுவா அமுங்கா எம்போயா (மொத்தம் 260 கிலோ, ஸ்நேட்ச் 115 கி. + கிளீன் மற்றும் ஜெர்க் 145 கி.) 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.

* ராணுவ பயிற்சி
மணிப்பூரின் மேற்கு இம்பால் பகுதியில் பிறந்து வளர்ந்த சனம்பம் ரிஷிகாந்தா சிங் (29 வயது), இந்திய ராணுவத்தின் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றதுடன், ராணுவத்திலும் இணைந்து பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு அகமதாபாத்தில் நடந்த காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரில் ரிஷிகாந்தா 60 கிலோ எடை பிரிவில் பங்கேற்று மொத்தம் 271 கிலோ எடை தூக்கி புதிய தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இந்த சிறப்பான செயல்பாட்டை தொடர்ந்து, கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிக்கு அவர் நேரடியாக தகுதி பெற்றார். முன்னதாக, பர்மிங்காமில் 2022ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் ரிஷிகாந்தா 55 கிலோ எடை பிரிவில் பங்கேற்றிருந்தாலும், பதக்கம் வெல்லும் வாய்ப்பு கை கூடவில்லை.

புனே, ராணுவ விளையாட்டு நிறுவனம், பின்னர் பாட்டியாலாவில் உள்ள நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு நிறுவனத்தில் பெற்ற கடுமையான பயிற்சிகளே தான் பதக்கம் வெல்ல உறுதுணையாக இருந்ததாக ரிஷிகாந்தா பெருமிதத்துடன் கூறியுள்ள ரிஷிகாந்தா, சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கு தயாராகும் வகையில், பல்கேரியாவில் உள்ள வாசில் லெவ்ஸ்கி தேசிய விளையாட்டு அகடமியிலும் பயிற்சி பெற்றுள்ளார்.

Tags : Commonwealth Games Tournament ,Rishiganda Singh ,GLASGOW ,COMMONWEALTH SPORTS ,SANAMBAM RISHIKANDA SINGH ,23rd Commonwealth Games ,Glasgow, Scotland ,
× RELATED காமன்வெல்த் விளையாட்டு போட்டி 3வது...