கிருஷ்ணராயபுரம், ஜுலை 23: கிருஷ்ணராயபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒன்றிய அரசானது அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தகம் ஒப்பந்தம் மூலம் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடகு வைக்க உள்ளதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணராயபுரம் கடைவீதியில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் கந்தசாமி பேசுகையில், ஒன்றிய அரசு அமெரிக்க உடன் சுதந்திர வர்த்தகம் ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்படும் வேளாண் பொருட்களுக்கு அமெரிக்காவில் 50 சதவீதம் வரிசூலிக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவின் வேளாண்மை பொருள்கள் இந்தியாவில் 0 சதவீதம் வரி இல்லாமல் உள்ளே கொண்டு வரப்படுவதால் இந்தியாவில் உள்ள விவசாயிகளின் உற்பத்தி பொருள்கள் விலை இல்லாமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். அதாவது தற்போது விவசாயிகள் உற்பத்தி செய்யும் பால் ரூ.35 முதல் வர்த்தக விலையில் ரூ. 50 வரை விக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் இருந்து பால் கொண்டு வந்தால் அதன் விலை ரூ. 15க்கு கொடுக்கப்படும். ஆனால் அது 100% இயற்கையாக கிடைக்குமா என்பது கூற முடியாது. இதனால் மக்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு நம் நாட்டின் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். ஆகையால் ஒன்றிய அரசு அமெரிக்க உடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைவிட வலியுறுத்தி கண்டனம் முழக்கமிட்டனர். கிருஷ்ணராயபுரம் ஒன்றிய விவசாய சங்க செயலாளர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
