சத்தியமங்கலம், ஜூலை 18: சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் நேற்று ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்தது. கோவில் முன்பு பெண் பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். மேலும் குண்டத்தில் உப்பு, மிளகு தூவி வழிபட்டனர்.
கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு கூழ் ஊற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர். சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த பண்ணாரி அம்மனை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கோயில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கொங்கு மண்ணின் பாரம்பரிய நடனமான சலங்கை ஆட்டம் நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டுகளித்தனர்.
பக்தர்கள் பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்ய தடுப்பு கம்பிகள அமைத்து நீண்ட வரிசை ஏற்படுத்தப்பட்டு குடிநீர் வசதி செய்து தரப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்புக்காக கோவில் நிர்வாகம் சார்பில் தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
