சிவகங்கை, ஜூலை 14: விதைகளின் முளைப்புத்திறன் அறிய விதைப்பரிசோதணை செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து சிவகங்கை விதைப்பரிசோதணை அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: விவசாயத்திற்கு விதைகள் மிக முக்கியமான, முதன்மையான இடுபொருளாகும். விதைகள் மூலம் நல்ல முளைப்புத்திறன், தேவையான பயிர் எண்ணிக்கை, சீரான பயிர் வளர்ச்சி, ஒரே நேரத்தில் அறுவடை செய்தல், கலப்பற்ற அதிக மகசூல் உள்ளிட்ட பல்வேறு பயன்களை பெற முடியும்.
எனவே முளைப்புத்திறன் பரிசோதனை செய்த, தரமான சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதன் மூலம் இந்த பயன்களை பெற முடியும். எனவே, விவசாயிகள் பெரிய விதைகள் 100 கிராமிற்கு குறையாமலும், சிறிய விதைகள் எனில் 10 கிராமிற்கு குறையாமலும் எடுத்துச்சென்று, சிவகங்கை விதை பரிசோதணை மையத்தில் பரிசோதணை செய்து பலன் பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
