ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், சிப்காட் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அதனை போலீசார் நிறுத்தி, சோதனை செய்தனர். இதில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் செல்வராஜ் நகரை சேர்ந்த அருண்பாண்டியன் (32) என்பவரது பேக்கில், 81 கிராம் கோகைன் போதை பவுடர் இருந்ததை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.40 லட்சம் என தெரியவந்தது.
இதை தொடர்ந்து, அருண்பாண்டியனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில், இன்ஜினியரிங் பட்டதாரியான அவர், புதுச்சேரியில் பணியாற்றிய போது, அக்கினியரசு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் கோவா அழைத்து சென்று, `கோகைன்’ போதை பவுடரை வாங்கி கொடுத்து சென்னையில் சேர்த்தால் 5,000 ரூபாய் கிடைக்கும் என கூறியதாக போலீசாரிடம் அருண்பாண்டியன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அக்கினியரசுவை போலீசார் தேடி வருகின்றனர்.
