சென்னை: மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு என்பதால் அதிமுகவில் இருந்து விலகுவதாக வைகைச்செல்வன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று எழுதியுள்ள கடிதம்:
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். தேர்தல் களத்தில் நான் தனித்து விடப்பட்ட நிலையிலும் கூட அதிமுகவிற்காக தேர்தல் பரப்புரையாற்றினேன். ஆனால், மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு என்பதை நான் உணர்ந்து கொண்டேன். மாணவ பருவம் தொட்டு ரத்தமும், சதையுமாக இருந்து இந்த இயக்கத்தோடு பணியாற்றி தற்போது விலக வேண்டிய சூழ்நிலையை எண்ணி பார்க்கையில், என் மனதில் ஏற்படும் கடுமையான வலியை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை.
‘புதிய இடத்தில் நடுவதற்கு புடுங்கிப் போன செடியில் இருக்கும் பழைய மண்ணைப் போல’ இந்த இயக்கத்திற்காக ஆற்றிய என் பழைய நினைவுகளை என்ன செய்வது என்று என்னே தெரியவில்லை. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
