காரைக்குடி: அரசுப்பணிகளைஆய்வு செய்த அமைச்சரின் தந்தையால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயல் பேரூராட்சி பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கப்பட்டது. இதனை அமைத்தால் நிலத்தடி நீர் பாதிக்கும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இப்பணிகளை கனிம வளத்துறை அமைச்சர் பிரபுவின் தந்தை துரை.கருணாநிதி மற்றும் காரைக்குடி நகர தவெக நிர்வாகிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது மக்கள் சுத்திகரிப்பு நிலையம் அமையக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் கிளம்பி சென்றனர். அரசு பணிகளை அமைச்சரின் தந்தை மற்றும் நிர்வாகிகள் ஆய்வு செய்து கருத்து கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
