அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே கடல் உணவு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவால் இன்று காலை மேலும் ஒருவர் இறந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் கடல் உணவு பொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த 21ஆம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் 70க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 28 ஆம் தேதி வரையில் சிகிச்சை பலனின்றி 16 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சனா ஜுவாங்க் (25) உயிரிழந்தார். இதையடுத்து, அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, மஞ்சங்காரணை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செங்குன்றம் தனியார் மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 27 பேர் குணமாகியுள்ளனர். மேலும், மருத்துவமனைகளில் உள்ள 38க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: